அருள் தரும் திருஅண்ணாமலை சித்தர்கள்



திருவண்ணாமலையில் மட்டும் சித்தர்கள் ஏன் அதிகமாக சமாதியடைந்துள்ளார்கள்?

திருவண்ணாமலை மட்டும் சித்தர்களின் பூமியாக
விளங்குவதன் மர்மம் என்ன?

திருவண்ணாமலை மலை இருக்கிறதே. அது ஒரு பிரமாண்டமான பிரபஞ்ச ரகசியம்.

அதாவது, பிரபஞ்சம் தோன்றிய காலத்தில் இருந்தே இந்த மலை இருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன.

சுமார் 260 கோடி வருடப் பழைமை வாய்ந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மலையே சிவம். அதாவது சிவலிங்கம். அந்த மலையைச் சுற்றி, அதாவது மலைலிங்கத்தைச் சுற்றி, 108 சிவலிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சொல்கின்றனர்.

இந்த மலையையும் மலையைச் சுற்றிப் புதைந்திருக்கும் 108 சிவலிங்கங்களையும் சுற்றித்தான் நாம் தற்காலத்தில் கிரிவலம் வந்து கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு சிவலிங்கமும் கண்ணுக்கு தெரியாத தெய்வீக அலைகளை மலை முழுவதும் பரப்பி வருகின்றன.

இதனால் மாதந்தோறும் பெளர்ணமி நன்னாளிலும் தமிழ் மாதத்தின் பிறப்பான முதல் நாளிலும்,ஒவ்வொரு பிரதோஷ நாளிலும் , சித்த புருஷர்களும் ஞானிகளும் யோகிகளும் , சூட்சும ரூபமாக இன்றைக்கும் கிரிவலம் வந்து, ஈசனை வணங்கி வழிபடுகிறார்கள் என்பதாக ஐதீகம்!

திருவண்ணாமலை
மலையின் மகாத்மியம்
மலையளவு இருக்கின்றன.

திருவண்ணாமலை எனும் புண்ணிய க்ஷேத்திரம், நம்மைப் போன்ற பக்தர்களுக்கு ஒரு திருத்தலம்.

ஆனால் அது சித்தர்களுக்கு புனித பூமி.

எத்தனையோ சித்தர்கள், இங்கு வந்திருக்கிறார்கள். வந்து தவமிருந்திருக்கிறார்கள். திரும்ப மனமில்லாமலேயே இங்கேயே தங்கி, ஜுவ சமாதியாகி இன்னும் தவத்தில் மூழ்கியிருக்கிறார்கள்.

இன்றைக்கும் சூட்சும ரூபமாய் இருந்து, தவத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதாக ஐதீகம்!

ஏன் சித்தர்கள் பூமியாக திருவண்ணாமலை இருக்கிறது?

நம் மன அதிர்வுகளை புத்தி தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வராமல் எத்தகைய சித்துக்களையும் செய்ய இயலாது.

இயல்பாகவே புவியியல் அமைப்பிலேயே எண்ணங்களை நம் கட்டுக்குள் கொண்டு வரக்கூடிய அதிர்வுகளை கொண்டு திருவண்ணாமலையானது அமைந்துள்ளது.

நம் மனதில் கோபம், ஆக்ரோஷம், குழப்பம்,கவலை ஆகியவை எழும் போது நம் உடலை சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு மேல் இருக்கும்.

இதனை பீட்டா அலைகள் என கூறுகின்றனர்.

இந்நிலையில் மனம் நம் கட்டுப்பாட்டில் இருக்காது.

நம் ஓய்வெடுக்கும் போது(ஆழ்ந்த தூக்கத்தின் போது) உடலை சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும்.

அந்த அலைகளை ஆல்ஃபா அலைகள் என கூறுகின்றனர்.

முயற்சி செய்தால் நம் எண்ணங்களை நம் கட்டுக்குள் கொண்டு வரலாம்.

அதே உடல் தியான நிலையில் இருக்கும் போது எட்டு ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும்.அதை தீட்டா அலைகள் என்கிறனர் விஞ்ஞானிகள்.

நம் எண்ணங்களை நம் இயக்கங்களை எளிதாக நம் கட்டுக்குள் கொண்டு வரலாம். இதற்காகவே உலகெங்கிலும் உள்ள சித்தர்கள் இங்கே தேடி வருகின்றனர்
திருவண்ணாமலையானது இயல்பாகவே “தீட்டா” அதிர்வுகளை கொண்டு உள்ளது.

இதனால் தவ நிலையில் உள்ள சித்தர்களின் உடலில்
இருந்து இந்த அலைகள் வெளிப்பட்டு கொண்டே இருக்கும்.

இதற்காகவே இங்கே சித்தர்கள் சமாதி அடைந்திருக்கிறார்கள்.

சித்தர்களின் பூமியாக திருவண்ணாமலை விளங்கும்
மர்மம் இதுதான்.

இறைவன் எங்கு குடியிருக்கிறானோ அங்குதான் சித்தர்களும் குடியிருப்பார்கள்.

சித்தர்களுக்கு எல்லாம் தலயாயச் சித்தர் ஆதி சித்தர் சிவபெருமான்தான்.

தலைவர் இருக்கும் இடத்தில்தானே தொண்டர்களும் குடியிருப்பார்கள்?.

அதனால் தான் திருவண்ணாமலையில் சிவ பெருமானுக்கு உறுதுணையாக,காலம் காலமாக நாம் பெரிதும் போற்றும் பதினெட்டு சித்தர்களும்,அவர்களுக்கு பக்கபலமாக 188 சித்தர்களும் இன்றும் அரூபமாக நடமாடி கொண்டு இருக்கிறார்கள்.

கைலாய மலையில் கூட காண கிடைக்காத அதிசயம் இது.

அத்திரி மகரிஷி,மச்ச முனிவர், கோரக்கர்,
கிராம தேவர்,துர்வாசர்,
சட்டை முனிவர்,
அகத்தியர்,போகர்,
காக புசுண்டர்,
உரோமேச சித்தர்,யூகி முனிவர், சுந்தரானந்தர், அழகனந்தா,பிரம்ம முனி, காலங்கி நாதர்,நந்தி தேவர், தன்வந்திரி, குரு ராஜரிஷி,கொங்கனர்,
உதயகிரிச் சித்தர், பிகுஞ்சக ரிஷி ,மேக சஞசார ரிஷி,தத்துவ ஞான சித்தர்,காளமீகா ரிஷி,விடன முனிவர்,யாகோபு முனிவர், அமுத மகாரிஷி,சூதமா முனிவர், சிவத்தியான முனிவர்,பூபால முனிவர், முத்து வீரமா ரிஷி,ஜெயமுனி,
சிறு வீரமா முனி,
வேதமுனி,சங்கமுனி, காசிபமுனி, பதஞ்சலி முனி, வியாகிரம மகாரிஷி, ஜனகமா முனி,சிவப்பிரம்ம முனி,பராச முனி,வல்ல சித்தர்,அஸ்வணி தேவர், குதம்பைச் சித்தர்,புண்ணாக்கு சித்தர், யோகச்சித்தர், கஞ்சமலைச் சித்தர், திருமூலநாதர்,மவுனச்சித்தர்,

தேகசித்திக் சித்தர்,வரரிஷி,
கவு பாலச்சித்தர்,மதிராஜ ரிஷி,கவுதமர்,தேரையர்,
விசுவனித் தேவர், அம்பிக்கானந்தர், டமாரானந்தர், கையாட்டிச்சித்தர், கண்ணானந்த சித்தானந்தர்,சச்சிதானந்தர்,
கணநாதர், சிவானந்தர்,சூரியானந்தர், சோகுபானந்தர், தட்சிணா மூர்த்தி, ரமநாதர் மதி சீல மகாமுனி, பெரு அகத்தியன், கம்பளி நாதர், புலஸ்தியர்,திரி காலாக்கயான முனி, அருட் சித்தர்,கவுன குளிகைச்சித்தர், ராஜரிஷி வசந்தமாமுனி, போதமுனி, காங்கேய ரிஷி,கான்சன முனி, நீயான சமாதிச்சித்தர், சாந்த மஹா ரிஷி, வாசியோகச்சித்தர்,வாத சாந்த மகாரிஷி, காலாட்டிச்சித்தர்,சத்தரிஷி,
தேவ மகரிஷி, பற்ப மகாரிஷி, நவநாதச்சித்தர், அடவிச்சித்தர்,நாதந்தச்சித்தர், ஜோதிரிஷி, பிரம்மானந்த ரிஷி,அநுமாதிச்சித்தர்,
ஜெகராஜ ரிஷி, நாமுனிச்சித்தர்,
வாசுதேவ மகாரிஷி, பாலையானந்தர்,
தொழுகன்னிச்சித்தர்….
என இருநூற்றுக்கும் அதிகமான சித்தர்கள் திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசித்ததாகவும் , அவற்றில் சுமார் 25க்கும் அதிகமான சித்தர்கள் இங்கு ஜீவசமாதி ஆனதாக அகத்தியர்
தான் இயற்றிய ஜீவநாடியில் எடுத்துரைத்துள்ளார்.

அவற்றுள் தகவல்கள் சேகரித்து கிடைக்க பெற்ற 20 சித்தர்களை பற்றி சுருக்கமாக ஒவ்வொரு சித்தராக காணலாம்.

அருணகிரி நாதர்:

திருவண்ணாமலையில் அவதரித்தவர் அருணகிரி நாதர். சிற்றின்ப மோகத்தால் சீரழிந்து வாழ்க்கையில் சலிப்படைந்து, பிறவியை வெறுத்து அண்ணாமலையார் ஆலய வல்லாள மகாராஜன் கோபுரத்தின் மீதிருந்து குதித்து உயிரைப் போக்கிக் கொள்ள முயன்றபோது, முருகப்பெருமானால் தடுத்தாட்கொள்ளப்பட்டார். “முத்தைத்தரு’ என அருணகிரிக்கு முருகன் அடியெடுத்துக் கொடுக்க “திருப்புகழ்’ தோன்றியது.

குகை நமச்சிவாயர்:

15-ம் நூற்றாண்டிலே திருவண்ணாமலையிலே வாழ்ந்தவர்.“திருவண்ணாலைக்கு வந்து ஞானகுருவாக இரு’ என்று அண்ணாமலையாரின் நேர்முக அழைப்பினால் ஞானியானவர், சீடரையே குருவாக்கிய செந்தமிழ் யோகி குகை நமச்சிவாயர்.

சித்த மகா சிவயோகி பாணி பத்திரசாமி:

திருவண்ணாமலை தீர்த்தக் குளத்து நீரையே திரட்டிக் குடமாக்கி (கி.பி.1290) அதிலேயே தண்ணீரை எடுத்துச் சென்று, அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டவர் சித்த மகா சிவயோகி பாணி பத்திரசாமி.

குரு நமசிவாயர்:

உண்ணாமுலை அம்மனிடமே உணவைக் கேட்டுப் பாடி தேவியின் திருக்கரங்களால் பொங்கலைப் பெற்றவர். தில்லைக் கோயிலின் திரைச் சீலையிலே தீப்பிடித்ததை திருவண்ணாமலையில் இருந்தபடியே அறிந்த தீயைத் தேய்த்து அணைத்த ஞானச் செல்வர் குரு நமசிவாயர்.

ஸ்ரீலஸ்ரீ தெய்வ சிகாமணி தேசிகர்:

திருவண்ணாமலை ஆதினத்தின் முதல் குருவாகி குன்றக்குடி ஆதினத்தை ஸ்தாபித்தவர் ஸ்ரீலஸ்ரீ தெய்வ சிகாமணி தேசிகர்.

மங்கையர்கரசியார்:

திருவண்ணாமலைப் பகுதியிலே ஏற்பட்ட பஞ்சத்தைப் போக்க, ஏரியை அமைத்து, உண்ணாமல் தவமிருந்து, மழையைப் பொழிய வைத்து ஊரையே செழிக்க வைத்தவர் மங்கையர்கரசியார்.

சோணாசலத் தேவர்:

தொண்ணூறு வயது வரை நாள்தோறும், திருவண்ணாமலையைத் தவறாமல் வலம் வந்து, அந்தப் புண்ணியதால் அண்ணாமலையானை நேரில் கண்டு பேறு பெற்றவர் சோணாசலத் தேவர்.

ஞானப்பிரகாசர்:

யாழ்பாணத்திலே பிறந்து தில்லையாடியின் பேரருளால் திரு அருணையிலே பெரும் புதையல் பெற்று, திருக்குளமும், திருமடமும் அமைத்து நல்லறங்களை நாளெல்லாம் கூறி மக்களைக் காத்த ஞானப்பிரகாசர்.

வீரவைராக்கிய மூர்த்தி சுவாமிகள்:

பாதகர்களைத் திருத்துவதற்காக, பழுக்கக் காய்ச்சிய இரும்புச் செருப்பை அணிந்து நடந்தவர் வீரவைராக்கிய மூர்த்தி சுவாமிகள்.

அப்பைய தீட்சிதர்:

ஐந்நூறு சீடர்களைப் பாடுபட்டு உருவாக்கி, அண்ணாமலையானின் புகழைப் பரப்பியவர். நூல்கள் பலவற்றை எழுதி, சைவ சமயப் பெருமைகளை உலகறியச் செய்த வேதாகம, சமய சாத்திர வித்தகரான அப்பைய தீட்சிதர்.

குமாரசாமி பண்டாரம்:

காணாமற் போன பூஜைப் பேழையை, அண்ணாமலையானின் திருக்கரங்களால் பெறும் பேறு பெற்றவர்; 16-ம் நூற்றாண்டில் குருதேவர் மடத்தில் தீட்சை பெற்று சிவப்பிரகாசர் எனும் ஞானியைக் கண்ட ஞானமணி குமாரசாமி பண்டாரம்.

தட்சிணாமூர்த்தி சுவாமிகள்:

வாய் பேச இயலாத ஊமையாய்ப் பிறந்து, திருவண்ணாமலையானின் பேரருளால் பாடும் திறனைப் பெற்றவர். தில்லையிலே திளைத்து, திருவாரூரிலே தியாகேசர் சன்னதி முன்னால் முக்தி பெற்றவர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள்.

ஆதிசிவப்பிரகாசர் சுவாமிகள்:

காவிரியாற்றின் நீரையே எண்ணெயாக்கித் தீபமேற்றியவர். பூமியிலிருந்து தீ ஜுவாலையை வரவழைத்து தனது திருமேனியையே அக்னிதேவனுக்கு ஆஹுதியாக்கிய ஆதிசிவப்பிரகாசர் சுவாமிகள்.

ஞானயோகி தம்பிரான் சுவாமிகள்:

கரிகாற்சோழன் காலத்திய பாதாளலிங்க மூர்த்தியை 16-ம் நூற்றாண்டு இறுதியில் பூஜித்தவர். அதே இடத்தில் விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர் ஆயிரங்கால் மண்டபம் கட்டியபோது, பாதாளலிங்கத்தை மாற்றிவிடாமல் பாதுகாத்த ஞானயோகி தம்பிரான் சுவாமிகள்.

ஸ்ரீலஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர் சுவாமிகள்:

தனது மரணத்தைத் தானே உணர்ந்து “ஜீவ சமாதி’ கண்டவர். ஜில்லா கலெக்டர் ஐடன் துரையின் கடும்நோயைத் தீர்த்து வைத்தவர். இருபுறமும் வரிப்புலிகள் காவலிருக்க ஞானத்தவம் செய்தவர். ஈசான்ய மடாலயத்தின் ஆதிகுரு (1750-1829) ஸ்ரீலஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர் சுவாமிகள்.

சற்குரு சுவாமிகள்:

கேரள மாநிலத்தில் பிறந்து, பாரத நாடெங்குமுள்ள புண்ணிய ஷேத்திரங்கள் சென்று வழிபட்டு இறுதியாக தியானத்திற்குகந்த தெய்வத் திருமலை திருவண்ணாமலைதான் எனத் தீர்வு கண்டு மேட மலையில் முருகப் பெருமானுக்கு கோயில் அமைத்த வழிபட்டவர். தனது வாழ்நாள் முழுவதும் மக்களிடம் தொடர்ந்து ஈடுபாடு கொண்டு பக்தியை வளர்க்கப் பாடுபட்டவர் சற்குரு சுவாமிகள்.

பத்ராசல சுவாமிகள்:

திருவண்ணாமலை வீதியிலே புரண்ட போது கிடந்து அருவுருவான அண்ணாமலையே உமா மகேஸ்வரன் எனக் கண்டுணர்ந்து தியானித்தபடி வருவோர்க்கெல்லாம் பேரருள் புரிந்து பார் புகழ் பெற்றவர் பத்ராசல சுவாமிகள்.

பழனி சுவாமிகள்:

பழனியிலிருந்த திருவண்ணாமலை வந்து ஆலயத்தில் உழவாரப் பணி புரிந்தவர். தினமும் அன்னக்காவடி சுமந்து அடியார்களின் பசிப்பிணி தீர்த்தவர். ஏழை, எளிய மக்கள் மேல் இரக்கம் கொண்ட சேவை புரிந்தவர் (1922), பாதாள லிங்கக் குகையிலே பால ரமணரைப் பல காலம் பாதுகாத்த சிவ முனிவர் பழனி சுவாமிகள்.

அம்மணியம்மாள்:

பூமிக்குள் புதைந்து கிடக்கும் புதையலை ஊடுருவி காணும் ஞான விழி பெற்ற புண்ணியத்தால், முடிக்கப்படாது பாதிக்கோபுரமாய் நின்ற திருவண்ணாமலையில் உள்ள வடக்கு கோபுரத்தைப் பூர்த்தி செய்தவர். மக்களின் தீராத நோய்களையெல்லாம் பஞ்சாட்சர மந்திரம் சொல்லித் திருநீறு தந்ததன் மூலம் தீர்த்து வைத்த புனிதவதி அம்மணியம்மாள்.

வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள்:

திருநெல்வேலியிலே அவதரித்துத் திருவருணையிலே முருக தரிசனம் கண்டவர். எல்லையில்லாத் தமிழ் வண்ணப் பாக்களோடு கம்பத்து இளையனார் எனப்படும் திருவண்ணாமலை முருகப் பெருமானுக்கு வேல் கொடுத்து வாழ்த்திய இசைஞானி வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் (1839-1898)

அங்கப் பிரதட்சண அண்ணாமலை சுவாமிகள்:

திருவண்ணாலை தீபத்திரு மலைப் பாதையிலே, அங்கம் புரள உருண்டு தவழ்ந்து அன்றாடம் வலம் வருவதையே லட்சியமாய்க் கொண்டவர்.
திருவண்ணாமலையிலுள்ள அறுபத்து மூவர் மடாலயத்தின் ஆரம்ப கால ஞான குரு அங்கப் பிரதட்சண அண்ணாமலை சுவாமிகள்.

சேஷாத்திரி சுவாமிகள் :

கருவிலேயே திருவுடையவராய் காஞ்சியில் பிறந்து திருவண்ணாமலைத் தலத்தில் வாழ்ந்த மகான் ஞானச் சித்தர் சேஷாத்திரி சுவாமிகள் (1870-1929)

சடைச்சியம்மாள் என்ற ஐடினி சண்முக யோகினி அம்மையார்:

அண்ணாமலையார்க்கே என்னை ஆளாக்குவேன் என்று கன்னிப் பருவம் வரை காத்திருந்தவர். கண்ணுதற் கடவுள் கனவிலே வந்து அருள் புரிந்தார். கண் விழித்ததும் தலைமுடி சடையாகி விட்டிருந்தது. திருவண்ணாமலை சென்று இறுதிவரை ஆலயத்தில் பணியாற்றிய சடைச்சியம்மாள் என்ற ஐடினி சண்முக யோகினி அம்மையார்.

‘தம்மணம் பட்டி’ அழகானந்த அடிகள்:

“துறவு கொள்வதே பொது சேவைக்கு உகந்ததென்று’ 36 வயது முதல் 103 வயது வரை (1882-1985) திருவண்ணாமலை மற்றும் தருமபுரிப்பாதையிலே திருப்பணி பலபுரிந்து, பொது மக்களுக்கு அத்தியாவசியமான சேவைகளையும், அவசரத் தேவைகளையும் மேற்கொண்டு, பரிபூரண பக்தியால் அண்ணாமலையானின் பேரருள் பெற்ற “தம்மணம் பட்டி’ அழகானந்த அடிகள்.

ராதாபாய் அம்மையார்:

உண்ணாமல் உறங்காமல் அண்ணாமலையானின் நினைவிலே பன்னிரண்டு ஆண்டுகள் தனிமையில் கடும் தவம் செய்து தொடர்ந்து மலையிலேயே வாழ்ந்தவர் ராதாபாய் அம்மையார்.

இறை சுவாமிகள்:

திருவண்ணாமலை மண்ணிலே ஓரடிக்கு 108 லிங்கங்கள் உண்டு என்பதை உலகுக்கு உணர்த்தியவர். பஞ்சாட்சர நமசிவாயம் 1008 மந்திர ஜபத்துடன் தெய்வீகத் திருமலையை ஒவ்வொரு அடியாக நடந்து கொண்டு வலம் வந்து பேரின்ப ஞானநிலை கண்டு பிறவிப் பிணி தீரப் பெற்றவர் இறை சுவாமிகள்.

மாதவச் செல்வர் இசக்கி சுவாமிகள்

1917-ல் பிறந்து ஆயிரத்தெட்டு முறை அண்ணாமலை அங்கப் பிரதட்சண வலம் கண்டவர். தேவர்களும் சித்தர்களும் கிரிவலம் புரிவதை ஞானக்கண்ணால் அறிந்து கூறிய மாதவச் செல்வர் இசக்கி சுவாமிகள்.

ரமண மகரிஷி:

திருச்சுழி கிராமத்திலே பிறந்து, மதுரையிலே கல்வி பயின்று,
திருவண்ணாமலையானின் நினைவால் திருவருணை வந்து, உண்ணாமல் உறங்காமல் கடும் தவம் மேற்கொண்டு மா தவஞானியாய், மகரிஷியாக உலகப்புகழ் பெற்றவர் ரமண மகரிஷி (1879-1950)

சிவயோகி ராம் சுரத்குமார்:

விரட்டுவதற்காக வீசிய கல் பறவையின் உயிரையே வாங்கி விட்டதால் 1918-ல் கங்கைக் கரையிலே பிறந்த அவர் அமைதியைத் தேடி காவிரிக் கரை வரை அலைந்தார். பல ஊர்களும் அலைந்து திரிந்து முடிவிலே ரமண மகரிஷியிடம் சரண் அடைந்தார். குருவருளால் அர்த்தநாரீஸ்வரரின் திருவருள் பெற்றார். அவர்தான் 1959 முதல் குடுகுடுப்பாண்டி போன்ற திருக்கோலமுடன் திருவண்ணாமலையிலே உலா வந்த சிவயோகி,ராம் சுரத்குமார்.

நடக்கட்டும் நம்புகிறோம் என்பது மனிதர்களின் வாக்கு!