சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர்.

தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார்.

விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: டிசம்பர் 11, 1882

பிறப்பிடம்: எட்டயபுரம், தமிழ்நாடு (இந்தியா)

பணி: கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர்

இறப்பு: செப்டம்பர் 11, 1921

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

சுப்ரமணிய பாரதியார் அவர்கள், சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார்.

அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். அவருடைய 5 வயதில் அவருடைய தாயார் காலமானார். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார்.


இளமைப் பருவம்

சிறு வயதிலேயே பாரதியாருக்கு தமிழ் மொழி மீது சிறந்த பற்றும், புலமையும் இருந்தது.

ஏழு வயதில் பள்ளியில் படித்துவரும்பொழுது கவிதைகள் எழுதத் தொடங்கினார்.

தன்னுடைய பதினொரு வயதில் கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார், இவருடைய கவிப்புலமையை பாராட்டிய எட்டயபுர மன்னர், இவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினார்.

அன்று முதல் இவர் “சுப்பிரமணிய பாரதியார்” என அழைக்கப்பெற்றார். .

பாரதியாரின் திருமண வாழ்க்கை

பாரதியார் அவர்கள், பள்ளியில் படித்துகொண்டிருக்கும் பொழுதே 1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு பாரதியார் வறுமை நிலையினை அடைந்தார்.

சிறிது காலம் காசிக்கு சென்று தங்கியிருந்தார். பிறகு எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார்.

பாரதியாரின் இலக்கிய பணி

‘மீசை கவிஞன்’ என்றும் ‘முண்டாசு கவிஞன்’ என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார், தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்தார்.

இவர் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைப்பெற்று விளங்கினார்.

1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். ‘கண்ணன்பாட்டு’, ‘குயில்பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’,’ புதிய ஆத்திச்சூடி’ போன்ற புகழ் பெற்ற காவியங்கள் பாரதியரால் எழுதப் பெற்றன.

விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு

சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்தது.

பாரதியார் “இந்திய பத்திரிக்கையின்” மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார்.

பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி “இந்தியா பத்திரிக்கைக்கு” தடை விதித்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது.

அதுமட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி “தேசிய கவியாக” அனைவராலும் போற்றப்பட்டார்.

இவர் சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக, நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றினார்.

“ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிபடுத்தியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

இறப்பு

1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது, எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார்.

பிறகு, 1921 செப்டம்பர் 11ம் தேதி, தனது 39 ஆவது வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலைப் பெற்றார்.

பாரதியாரை நினைவூட்டும் சின்னங்கள்

எட்டயபுரத்திலும், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியிலும் பாரதியார் வாழ்ந்த இடத்தை பாரதியாரின் நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு மாற்றி இன்று வரை பொதுமக்களின் பார்வைக்காக பராமரித்து வருகிறது.

இவர் பிறந்த எட்டயபுரத்தில், பாரதியின் நினைவாக மணிமண்டபமும் அமைக்கப்பட்டு இவருடைய திருவுருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.

பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும், இவருடைய திருவுருவச் சிலையும், இவரின் நினைவை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

பாரதியை மக்கள், ‘கவி’, ‘மானுடம் பாடவந்த மாகவி’, ‘புது நெறி காட்டிய புலவன்’, எ’ண்ணத்தாலும் எழுத்தாலும் இந்திய சிந்தனைக்கு வளம் சேர்த்தவர்’, ‘பல்துறை அறிஞர்’, ‘புதிய தமிழகத்தை உருவாக்க கனவு கண்ட கவிக்குயில்’, ‘தமிழின் கவிதை’ மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர், என்றெல்லாம் புகழ்கின்றனர். உலகதமிழர் நாவில் மக்கள்கவி பாரதியாரின் பெயர் அடிக்கடி உச்சரிக்கபடுகிறது என்றால் அது மிகையாகாது.‍‍‍

மேற்கோள்கள்

  • ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்”.
  • பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்.[1]
  • கவலையும், பயமும் எனக்கு பகைவர். நான் இப்பகைவரை வென்று தீர்த்தேன். அதனால் மரணத்தை வென்றேன். நான் அமரன்.
  • ஆழ்ந்த நினைப்பு, அசையாத நினைப்பு, வலிய நினைப்பு, மாறாத நினைப்பு விரைவில் உலகம் அறியத்தக்க வெளியுண்மையாக மாறிவிடும்.
  • செய்வதைத் துணிந்து செய்
  • ஜாதி மதங்களைப் பாரோம் –
  • உயர் ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
  • வேதிய ராயினும் ஒன்றே –
  • அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே.
  • கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி.
  • நெஞ்சு பொறுக்குதில்லையே- இந்த
  • நிலை கெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்

பாரதியாரின் பாஞ்சாலி சபதம் என்பது ஓர் தலைசிறந்த படைப்பாகும்.

இது இந்தியாவை திரௌபதியாகவும், ஆங்கிலேயர்களை கௌரவர்களாகவும், சுதந்திர போராட்ட வீரர்களை பாண்டவர்களாகவும், உருவகப்படுத்தியிருந்தார்.

திரௌபதியின் போராட்டம் மூலமாக அவர் இந்தயத் தாய் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டுள்ளதை மறைமுகமாக வெளிப்படுத்தினார்.

பாரதியாரை தமிழகத்தின் சொத்து என்று இராஜாஜி அவர்கள் கூறினார்.

பாரதியாரின் புதுக்கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்பவர் – வால்ட் விட்மன்

பாரதியாரின் வசனக் கவிதை எழுத உந்துதலாக இருந்த அமெரிக்க கவிஞர் – வால்ட் விட்மன்.

இராஜி அவர்கள் பாரதியார் தமிழகத்தின் சொத்து என்று கூறினார்.

பாரதியாரின் அரசியல் குரு பாலகங்கதர திலகர் ஆவார்.


நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்.

தேடிச் சோறுநிதந் தின்று – பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்

வாடித் துன்பமிக உழன்று – பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து – நரை

கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்

கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல

வேடிக்கை மனிதரைப் போலே – நான்

வீழ்வே னென்றுநினைத் தாயோ?

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் அவை

நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்

முன்னைத் தீயவினைப் பயன்கள் – இன்னும்

மூளா தழிந்திடுதல் வேண்டும் – இனி

என்னைப் புதிய வுயிராக்கி – எனக்

கேதுங் கவலையறச் செய்து – மதி

தன்னை மிகத்தெளிவு செய்து – என்றும்

சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்.[2]

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே – அதைத் தொழுது படித்தடடி பாப்பா.

இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை.

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்தல் வேண்டும்!


2021, செப்டம்பர், 11 – மகாகவி பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில், அவர் மறைந்த செப்டம்பர், 11 ஆம் தேதி ‘மகாகவி நாளாக’ கடைபிடிக்கப்படும் என, தமிழக முதலமைச்சர். திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.




சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)

மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)

கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)




கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரை



கி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை


கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை


கி.பி. 1951 முதல்



புதிய கற்காலம்


சங்ககால தமிழ் புலவர்கள்

கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)