இறை, செப்பு, பதில் என்பன விடையின் வேறுபெயர்கள் ஆகும். வினாவப்படும் வினாக்களுக்குக் கூறப்படும் விடைகள் எட்டு வகைப்படும். அவை சுட்டு விடை, மறைவிடை, நேர்விடை, ஏவல்விடை, வினாஎதிர் வினாதல் விடை, உற்றதுரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை என்பனவாகும்.
- சுட்டுவிடை
‘சென்னைக்கு செல்லும் வழி யாது?’ என்று வினவினால், ‘இது’ என்பதுபோலச் சுட்டிக் கூறும் விடை சுட்டுவிடை எனப்படும்.
- மறைவிடை (எதிர்மறுத்துக் கூறல் விடை)
‘இது செய்வாயா?’ என்று வினவியபோது, ‘செய்யேன்’ என்பதுபோல மறுத்து கூறும் விடை.
- நேர்விடை ( உடன்பட்டுக் கூறல் )
‘இது செய்வாயா?’ என வினவும்போது, ‘செய்வேன்’ என உடன்பட்டு கூறும் விடை.
- ஏவல் விடை
‘இது செய்வாயா?’ என வினவும்போது, ‘நீயே செய்’ என ஏவிக் கூறுவது ஏவல் விடை.
- வினாஎதிர் வினாதல் விடை
‘இதுசெய்வாயா?’ என வினவும்போது, ‘செய்யாமலிருப்பேனா?’ என வினாவையே விடையாகக் கூறுவது வினாஎதிர் வினாதல் ஆகும்.
- உற்றதுரைத்தல் விடை
‘இது செய்வாயா?’ என வினவும்போது, ‘உடம்பு நொந்தது’ என தனக்கு உற்றதனைக் கூறுவது, உற்றதுரைத்தல்.
- உறுவது கூறல்விடை
‘செய்வாயா?’ என்ற வினாவிற்கு, ‘கை வலிக்கும்’ எனத் தனக்கு வரபோவதனை விடையாகக் கூறுவது.
- இனமொழி விடை
‘ஆடுவாயா?’ என வினவும்போது, ‘பாடுவேன்’ என ஆடுவதற்கு இனமான பாடுவதை விடையாக கூறுவது.
சுட்டு, மறை, நேர் – வெளிப்படையாக விடை தரும்.
ஏவல், வினாஎதிர்வினாதல், உற்றது உரைத்தல், உறுவது கூறல், இனமொழி – குறிப்பால் விடை தரும்.