இறை, செப்பு, பதில் என்பன விடையின் வேறுபெயர்கள் ஆகும். வினாவப்படும் வினாக்களுக்குக் கூறப்படும் விடைகள் எட்டு வகைப்படும். அவை சுட்டு விடை, மறைவிடை, நேர்விடை, ஏவல்விடை, வினாஎதிர் வினாதல் விடை, உற்றதுரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை என்பனவாகும்.

  1. சுட்டுவிடை

‘சென்னைக்கு செல்லும் வழி யாது?’ என்று வினவினால், ‘இது’ என்பதுபோலச் சுட்டிக் கூறும் விடை சுட்டுவிடை எனப்படும்.

  1. மறைவிடை (எதிர்மறுத்துக் கூறல் விடை)

‘இது செய்வாயா?’ என்று வினவியபோது, ‘செய்யேன்’  என்பதுபோல மறுத்து கூறும் விடை.

  1. நேர்விடை ( உடன்பட்டுக் கூறல் )

‘இது செய்வாயா?’ என வினவும்போது, ‘செய்வேன்’ என உடன்பட்டு கூறும் விடை.

  1. ஏவல் விடை

‘இது செய்வாயா?’ என வினவும்போது, ‘நீயே செய்’ என ஏவிக் கூறுவது ஏவல் விடை.

  1. வினாஎதிர் வினாதல் விடை

‘இதுசெய்வாயா?’ என வினவும்போது, ‘செய்யாமலிருப்பேனா?’ என வினாவையே விடையாகக் கூறுவது வினாஎதிர் வினாதல் ஆகும்.

  1. உற்றதுரைத்தல் விடை

‘இது செய்வாயா?’ என வினவும்போது, ‘உடம்பு நொந்தது’ என தனக்கு உற்றதனைக் கூறுவது, உற்றதுரைத்தல்.

  1. உறுவது கூறல்விடை

‘செய்வாயா?’ என்ற வினாவிற்கு, ‘கை வலிக்கும்’ எனத் தனக்கு வரபோவதனை விடையாகக் கூறுவது.

  1. இனமொழி விடை

‘ஆடுவாயா?’ என வினவும்போது, ‘பாடுவேன்’ என ஆடுவதற்கு இனமான பாடுவதை விடையாக கூறுவது.

சுட்டு, மறை, நேர் – வெளிப்படையாக விடை தரும்.

ஏவல், வினாஎதிர்வினாதல், உற்றது உரைத்தல், உறுவது கூறல், இனமொழி – குறிப்பால் விடை தரும்.