கர்நாடகா (Karnāṭaka) என்பது இந்தியாவின் தென் பகுதியில் உள்ள ஒரு மாநிலமாகும்.
1956, நவம்பர், 1 அன்று – மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் இம் மாநிலம் உருவாக்கப்பட்டது.
மைசூர் மாநிலம் என்று அழைக்கப்பட்டு வந்த இம் மாநிலம் 1973 -இல் கர்நாடகா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
கர்நாடகா மாநிலமானது மேற்கில் குடக்கடலையும் (அரபிப் கடல்) வட மேற்கில் கோவாவையும், வடக்கில் மராட்டிய மாநிலத்தையும், கிழக்கில் ஆந்திரப் பிரதேசத்தையும், தென் கிழக்கில் தமிழ்நாட்டையும், தென் மேற்கில் கேரளாவையும், எல்லைகளாகக் கொண்டுள்ளது.
இம் மாநிலம் 74,122 சதுர மைல்கள், அதாவது 191,976 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது.
இது இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் 5.83% ஆகும்.
30 மாவட்டங்களைக் கொண்டுள்ள இம் மாநிலம் பரப்பளவில் இந்தியாவின் எட்டாவது மிகப் பெரிய மாநிலமாகத் திகழ்வதுடன் மக்கள்தொகையில் இந்திய அளவில் ஒன்பதாவது இடத்தையும் கொண்டுள்ளது.
கன்னடம் ஆட்சி மொழியாகவும் பெருமளவு பேசப்படும் மொழியாகவும் உள்ளது.
கர்நாடகா என்ற பெயருக்கு பல வித சொல்லிலக்கணம் பரிந்துரைக்கப்பட்டாலும், ‘கரு’ மற்றும் ‘நாடு’ என்ற கன்னட வார்த்தைகளில் இருந்துதான் அது உருவாக்கப்பட்டுள்ளது என்பது பொதுவான கருத்து.
இந்த வார்த்தைகளின் பொருள் மேட்டு நிலம் என்பதாகும். ஆங்கிலேயர்கள் இம் மாநிலத்தை கர்நாடிக் என்றும் சில சமயங்களில் கர்நாடக் என்றும் குறிப்பிட்டனர்.
பழங் கற்கால பாரம்பரியத்தைக் கொண்டுள்ள கர்நாடகா, தொன்மையான மற்றும் நடு கால இந்தியாவின் சில வலிமை வாய்ந்த பேரரசுகளின் தாயகமாகவும் திகழ்ந்துள்ளது.
இப் பேரரசுகளால் சார்பகண்ட மெய்ப்பொருள் அறிவச்செம்மல்களும், இசை வல்லுநர்களும் சமய, பொருளாதார மற்றும் இலக்கிய இயக்கங்களைத் தொடங்கினர்.
அவை இன்றுவரை நிலைத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவிலேயே கன்னட மொழி எழுத்தாளர்கள்தான் அதிக அளவில் ஞானபீட விருது பெற்றுள்ளார்கள்.
மாநிலத் தலைநகராக விளங்கும் பெங்களூரு, இந்தியா சந்தித்து வரும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் முன்னோடியாக உள்ளது.
இம்மாநிலத்தில் ஜோக் அருவி உள்ளது.
இந்தியாவில் முதன் முதலாக காப்பி சாகுபடி செய்யப்பட்ட மாநிலம் கர்நாடகா ஆகும்.
இந்தியாவில் அதிக அளவில் காபி உற்பத்தி செய்யும் மாநிலம் கர்நாடகம் ஆகும்.
இந்தியாவின் முதல் சந்தன மர அருங்காட்சியகம் மைசூரில் அமைந்துள்ளது.
இந்தியாவிலேயே தங்கச் சுரங்கம் உள்ள ஒரே மாநிலம் ஆகும்.
அரபிக்கடலின், மேற்கு கடற்கரையில் மங்களூர் துறைமுகம் அமைந்துள்ளது.