- மகரஈற்றுச் சொற்கள் வருமொழியோடு புணரும்பொழுது இறுதி மகரம்கெட்டு உயிரீறு போல நின்று உயிர் முதன்மொழியோடு உடம்படு மெய் பெற்றுப் புணரும்.
எ.கா மரம்+அடி (மகரம் கெட்டு) மர+அடி
(உடம்படு மெய் பெற்று) மரவ்+அடி
“உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவதியல்பே” விதிப்படி
மர(வ்+அ)டி = மரவடி என்று புணரும்.
- மகரஈறுகெட்டு வருமொழி முதலில் உள்ள வல்லெழுத்து மிக்குப் புணரும்.
மரம்+கால் = ஈறு கெட்டு,
மர+கால் என்றாகிப் பின் வருமொழி முதலில் உள்ள ககரஒற்று
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும்” எனும் விதிப்படி, மர+கால் = மரக்கால் என்று புணரும்.
- மகரஈறு வருமொழி முதலிலுள்ள வல்லினத்திற்கு இனமான மெல்லினமாகத் திரிந்தும் புணரும்.
காலம்+கடந்தது = காலங்கடந்தது
மகரஈறு வருமொழி முதலிலுள்ள ககரத்திற்கு இனமான ஙகரமாகத் திரிந்து புணர்ந்தது.
“மவ்வீ றொற்றழிந் துயிரீ றொப்பவும்
வன்மைக் கினமாகத் திரிபவும் ஆகும்”- நன்னூல் 219